உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் போர்த்துக்கல்லில் வசிக்கும் பிரித்தானியர்கள் தங்களது வதிவிட உரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்களெனவும் போர்த்துக்கலுக்கு பயணம் செய்வதற்கு பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை எனவும் அந்நாட்டு பொருளாதார அமைச்சர் பெட்ரோ சீசா வியேரா உறுதியளித்துள்ளார்.அதேபோல் பிரித்தானிய அரசாங்கமும் போர்த்துகீசிய குடிமக்களுக்கு பரஸ்பர சலுகைகளை வழங்குமென தமது அரசாங்கம் நம்புவதாகவும் நேற்றையதினம் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் பிரித்தானியாவுக்கு என்ன தேவை என்பது எமக்கு தெரியவில்லை, பிரித்தானியாவால் மாற்றுத்திட்டமொன்றை சமர்ப்பிக்க முடியாவிட்டால் ஏற்படக்கூடிய சூழ்நிலைக்கு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
பிரித்தானியர்களே போர்த்துக்கல்லின் பெரும்பான்மையான சுற்றுலா பயணிகளாக இருந்த போதிலும் சமீபத்திய காலங்களில் இந்த எண்ணிக்கை பிரெக்ஸிற் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு விளம்பர பிரசாரமொன்றை பிரித்தானியாவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் பெட்ரோ சீசா வியேரா கூறினார்.





